இந்தியாவில் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்ததில் குறைந்தபட்சம் 274 பேர் கொல்லப்பட்டனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

குஜராத்தின் தலைநகர் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் பயணித்த ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் வியாழக்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளானதில் 241 பயணிகள் மற்றும் ஊழியர்கள் கொல்லப்பட்டனர். அதற்கும் மேலாக, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மக்கள் அடர்த்தியான பகுதியில் விபத்துக்குள்ளானதில் தரையில் இருந்த மேலும் 24 பேர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மதிய உணவிற்காக மாணவர்கள் கூடியிருந்த மருத்துவக் கல்லூரி விடுதி நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பாகங்கள், ஜூன் 13, 2025 வெள்ளிக்கிழமை, இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் காணப்படுகின்றன. [AP Photo/Rafiq Maqbool]

விமானத்தில் இருந்து தப்பிய ஒரே நபரான ரமேஷ் விஸ்வகுமார், அவசரகால கதவின் அருகே அமர்ந்திருந்ததால் விமானத்திலிருந்து குதிக்க முடிந்தது. அவர் தற்போது அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் மனநல சிகிச்சையில் உள்ளார். இறந்தவர்களில் 168 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், ஏழு போர்த்துகீசிய பிரஜைகள், ஒரு கனேடியர், அத்துடன் விமானத்தின் கேப்டன், துணை விமானி மற்றும் 10 விமான ஊழியர்களும் அடங்குவர்.

விபத்தில், 100,000 லிட்டர் (சுமார் 25,000 கேலன்) எரிபொருளை சுமந்து சென்ற நீண்ட தூர விமானம், சுக்குநூறாகி தீப்பிழம்புகளால் சூழப்பட்டு, அடர்த்தியான கரும்புகையை பரப்பியது. விமானத்தின் உடற்பகுதியின் பாகங்கள் அது விபத்துக்குள்ளான கட்டிடத்தைச் சுற்றி சிதறிக்கிடந்தன. விமானத்தின் வால் பகுதி கட்டிடத்தின் மேல் சிக்கி நின்றது. பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு செல்லப்பட்டு நோயாளர் ஊர்தியில் ஏற்றிச் செல்ப்படுவதை காட்சிகள் காட்டுகின்றன. தொலைபேசியில் எடுக்கப்பட்ட படங்கள், எரிந்த உடல்களையும், சில அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்திருப்பதையும், ஒரு பெரிய வெடிப்புக்குப் பிறகு ஒரு போர் மண்டலத்தின் தோற்றத்தை காட்சிப்படுத்தின.

'நாங்கள் வீட்டில் இருந்த போது ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டோம், அது ஒரு பெரிய குண்டுவெடிப்பு போல் தோன்றியது. பின்னர் முழுப் பகுதியையும் சூழ்ந்த மிகவும் இருண்ட புகையைக் கண்டோம்,' என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பகுதியில் வசித்து வரும் 63 வயதான நிதின் ஜோஷி ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை அடையாளம் காண டிஎன்ஏ மாதிரிகளைச் சமர்ப்பித்த பிறகு அகமதாபாத்தின் சிவில் மருத்துவமனைக்கு வெளியே முகாமிட்டிருப்பதையும் செய்திகள் காட்டுகின்றன.

இந்த துயரத்தால் பொதுமக்கள் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்திருந்தாலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஏனைய மாநிலத் தலைவர்கள் உட்பட அரசியல் தலைவர்கள், விபத்து நடந்த இடத்தையும் மருத்துவமனைகளையும் பார்வையிட்டு, வெற்றுக் கவலை மற்றும் அனுதாபத்தை வெளிப்படுத்தி பிரதிபலித்துள்ளனர். மானத்தைக் காப்பாற்றும் முயற்சியில், ஏர் இந்தியாவின் உரிமையாளரான டாடா குழுமம், விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 10 மில்லியன் ரூபாய் (தோராயமாக $US116,106) இழப்பீடு வழங்குவதாக அறிவித்ததுடன் காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் செலவுகளை ஈடுகட்டுவதாக உறுதியளித்ததோடு, விபத்தில் சேதமடைந்த பி.ஜே. மருத்துவ விடுதியை மீண்டும் கட்டுவதற்கு உதவி செய்வதாகவும் உறுதியளித்தது.

இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு தெரிவித்தார். விசாரணைக்கு உதவ அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து அதிகாரிகள் புலனாய்வாளர்களை அனுப்புவதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டு விபத்துகளுக்குப் பிறகு, போயிங் ஜெட்லைனர் சம்பந்தப்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும். 737 MAX 8 விமானங்கள் சம்பந்தப்பட்ட அந்த இரண்டு விபத்துக்களும் மொத்தம் 346 பயணிகளையும் பணியாளர்களையும் காவுகொண்டன. அந்த விமானங்களின் உற்பத்தி குறித்து போயிங் பல விசாரணைகளை எதிர்கொண்டுள்ளது. அந்த விசாரணைகளில், விமானங்கள் மிகவும் குறைபாடுள்ளவை என்பதை போயிங் நிர்வாகிகள் அறிந்திருந்த போதிலும் அவற்றின் உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் அழுத்தம் கொடுத்தனர் என்பது கண்டறியப்பட்டது.

நிறுவனங்களுக்கும் அவற்றைப் பாதுகாக்கும் முதலாளித்துவ அரசுக்கும் இடையிலான கூட்டுச் சதித்திட்டத்தின் பல எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக, போயிங் சமீபத்தில் நீதித்துறையுடன் வழக்குத் தொடராத ஒப்பந்தத்தை எட்டி, MAX 8 விபத்துகளுக்கு எந்தவொரு குற்றவியல் வழக்குத் தொடரலையும் தவிர்த்துக்கொண்டு, ஒரு மரணத்திற்கு 1.3 மில்லியன் டொலர் மட்டுமே செலுத்தியது.

அகமதாபாத்தில் நடந்த விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விமானத்தின் இறக்கை மடிப்புகள், தரையிறங்கும் சில்லுகள், என்ஜின்கள் மற்றும் பல, விமானம் உயர பறப்பதற்கு தேவையான உந்துசக்தியை உருவாக்குவதைத் தடுத்த சாத்தியமான பிரச்சினைகள் என்று ஆரம்ப விமர்சனம் விவாதித்தது. தொலைக்காட்சிகளின் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் விமானம் கோணலாக சென்றதை காட்டுகின்றன. விமானி உயரத்திற்கு செல்ல முயற்சித்திருக்கலாம். பின்னர் அது விமான நிலையத்திற்கு அருகில் மோதி ஒரு தீப்பந்தமாக வெடித்தது.

விமானிகள் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு உயிருக்கு ஆபத்தான அவசரநிலையைக் குறிக்கும் 'மேடே' அழைப்பை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் இருந்தவர்களுக்கு மேலதிக தகவல்களைப் பெறமுடியாமல் போய்விட்டது. வெள்ளிக்கிழமை, விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

'இரட்டை எஞ்சின் செயலிழப்பு ஏற்படுவதற்கான மிகவும் அரிதான சாத்தியக்கூறுகள்” குறித்த நிபுணர்களின் ஊகங்களை பிபிசி செய்தி மேற்கோள் காட்டியது. பிரதான இயந்திரங்கள் செயலிழக்கும்போது செயல்படும் அவசர காப்பு அமைப்பான விமானத்தின் ராம் ஏர் டர்பைன் (Ram Air Turbine-RAT) பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன என்று அது குறிப்பிட்டது. ஒரு சிரேஷ்ட விமானியை மேற்கோள் காட்டிய பிபிசி, அத்தகைய செயலிழப்பு 'எரிபொருள் மாசுபாடு அல்லது அடைப்பு' காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று எடுத்துக்காட்டியது. விமான இயந்திரங்கள் துல்லியமான எரிபொருள் அளவீட்டு அமைப்பைச் சார்ந்துள்ளதுடன், எந்தவொரு அடைப்பும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் இயந்திர நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் அது விளக்கியது.

விமான பாதுகாப்பு நிபுணர்கள் அவசர முடிவுகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளனர். முன்னாள் விமானியும், ஆலோசனை நிறுவனமான பாதுகாப்பு இயக்க முறைமையின் (Safety Operating Systems) தலைமை நிர்வாகியுமான ஜோன் எம். காக்ஸ், பிசினஸ் டுடே ஊடகத்திடம் கூறியதாவது: 'இந்த கட்டத்தில், இது மிக மிக மிக ஆரம்பம். எங்களுக்கு அதிகம் தெரியாது, ஆனால் 787 மிக விரிவான விமானத் தரவு கண்காணிப்பைக் கொண்டுள்ளது.' விமானத்தின் இரண்டு கறுப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.

'விமானங்கள் மற்றும் விமான அமைப்பு ஒரு பிரச்சனை, பேரழிவிற்கு இட்டுச் செல்வதைத் தடுக்க, பல வழிவகைகளைக் கொண்டுள்ளன,' என நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. இதன் விளைவாக, விபத்துக்கள் பொதுவாக பல தோல்விகளின் விளைவாக இருப்பதால், அவற்றை கண்டறிய நீண்ட விசாரணை தேவைப்படுகிறது.

இருப்பினும், ஏர் இந்தியா, மோடி அரசாங்கம், போயிங் ஆகியவை இந்த துயரத்திற்கான பொறுப்பைத் தவிர்க்க முயற்சிப்பர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நாட்டின் மிகப்பெரிய அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனமான ஏர் இந்தியா, அரசுக்குச் சொந்தமானதாகவே இருந்தபோதும், 580 பில்லியன் ரூபாய் (8 பில்லியன் டாலர்) பெரும் கடன் சுமையில் சிக்கித் தவித்தது. கிட்டத்தட்ட அனைத்து அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மோடி அரசாங்கம், 2022 இல் தொழிலதிபர் ரத்தன் டானுக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான டாடா குழுமத்திற்கு, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை அற்ப விலைக்கு விற்றது. கடந்த ஆண்டு, டாடா நிறுவனம் அதன் கூட்டு வணிகமான விஸ்டாராவுடன் ஏர் இந்தியாவை இணத்தது.  விஸ்டாரா நிறுவனமே சிங்கப்பூர் ஏர்லைன்ஸையும் நடத்தி வருகின்றது.

அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின்படி, அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தபோது, ​​விமான நிறுவனம் இரண்டு முறை விபத்துக்குள்ளானது. 2010 ஆம் ஆண்டில், துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் தென்னிந்தியாவின் மங்களூரில் ஓடுபாதையைத் தாண்டிச் சென்று ஒரு பாறையில் மோதி, அதில் பயணித்த 166 பேரில் 158 பேர் கொல்லப்பட்டனர். 2020 இல், துபாயிலிருந்து தென்னிந்தியாவின் கோழிக்கோடு நோக்கிச் சென்ற - விமான நிறுவனத்தின் குறைந்த விலை துணை நிறுவனமான- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கனமழையின் போது ஓடுபாதையை விட்டு விலகி, இரண்டாகப் பிளந்ததில், 18 பேர் உயிரிழந்ததுடன் 120 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரண்டு சம்பவங்களிலும் பழைய போயிங் 737-800 விமானங்களே விபத்துக்குள்ளாகின.

போயிங் விமானங்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய சம்பவங்களின் பின்னணியில் வியாழக்கிழமை நடந்த துயர விபத்து, பாதுகாப்பு ஒழுங்குமுறை அலட்சியம் மற்றும் உற்பத்தித் தரம் குறித்து குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளது. இதில் கடந்த ஆண்டு மார்ச்சில் ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்திற்குப் பறந்து கொண்டிருந்த LATAM ஏர்லைன்ஸின் போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானம் நடுவானில் கீழே விழுந்தமையும் அடங்கும். இதில் 50 பேர் காயமடைந்தனர்.

போயிங் 787 விமானத்தின் முதல் அபாயகரமான விபத்து இதுவாகும் என்றாலும், போயிங்கின் ரென்டன் ஆலை மற்றும் அதன் முக்கிய விநியோகஸ்தரான ஸ்பிரிட் ஏரோசிஸ்டம்ஸ் மீதான மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) நடத்திய ஆராய்வு, தரக் கட்டுப்பாட்டுத் தேவைகளுக்கு இணங்காத 'டஜன் கணக்கான சிக்கல்கள்', 'பல சம்பவங்கள்' ஆகியவற்றை வெளிப்படுத்தியது. போயிங் உற்பத்தி, 89 தயாரிப்பு ஆய்வுகளில் 33 இல் தோல்வியடைந்ததுடன் 97 முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகின்ற அதே நேரம், ஸ்பிரிட் ஏரோசிஸ்டம்ஸ் 13 தேர்வுகளில் ஏழு தேர்வுகளில் தோல்வியடைந்தது. இதில் பொறியியலாளர்கள், 'கதவு சீலை சரிபார்க்க ஹோட்டல் திறப்பு அட்டையை' பயன்படுத்துவது மற்றும் 'கதவு சீலில் டான் சவர்க்காரத்தை ஒரு மசகு எண்ணெயாகப் பயன்படுத்துவதும்' அடங்கும்.

பெரும்பாலான தோல்விகள் 'அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி செயல்முறை, நடைமுறை அல்லது அறிவுறுத்தலை' பின்பற்றாமை மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆவணங்களில் உள்ள சிக்கல்கள் போன்றவை, FAA ஆல் 'ஆலை அடித்தள ஆரோக்கியம்' மற்றும் கருவி மேலாண்மை சிக்கல்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

இந்த கண்டுபிடிப்புகள் 'பேரழிவு' பாதுகாப்பு தோல்விகள், 'மூடிமறைக்கும் கலாச்சாரம்' மற்றும் போயிங் 'பாதுகாப்பை விட லாபத்துக்கு' முன்னுரிமை கொடுப்பது பற்றி முன்னாள் தர முகாமையாளர் ஜோன் பார்னெட் விடுத்த எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகின்றன. 1985 முதல் 2017 வரை போயிங்கில் பணிபுரிந்த பார்னெட், விமானக் கட்டுப்பாட்டு வயரிங்கில் உலோகத் துண்டுகள் பாதிப்பை ஏற்படுத்துவதாகப் புகாரளித்ததோடு 787 ட்ரீம்லைனர் அவசர ஆக்ஸிஜன் அமைப்புகளில் 25 சதவீதம் சரியாக வேலை செய்யவில்லை என்பதைக் கண்டறிந்ததுடன், 'குறைபாடுகளை ஆவணப்படுத்த வேண்டாம்' என்றும் குறைபாடுள்ள பொருட்களை பொருத்துமாறும் நிர்வாகம் ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கூறினார்.

இராணுவ ஒப்பந்தக்காரருக்கு எதிராக சாட்சியமளிப்பதற்கு முன்பு அல்லது இடையில் இறந்து கிடந்த போயிங்கின் இரண்டு தகவல் அம்பலப்படுத்தியவர்களில் பார்னெட்டும் ஒருவர் ஆவார்.

போயிங்கிலிருந்து அதிக முதலீட்டை ஈர்ப்பதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளில், மோடி வானவெளி நிறுவனத்தை மீண்டும் மீண்டும் பாராட்டியுள்ளார். மார்ச் 18 அன்று இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது, ​​போயிங்கின் சிரேஷ்ட துணைத் தலைவர் பிரெண்டன் நெல்சன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய போது, சமீபத்திய சீர்திருத்தங்கள் போயிங் போன்ற நிறுவனங்களுக்கு நாட்டை மிகவும் 'கவர்ச்சிகரமான இடமாக' மாற்றியுள்ளன என்று கூறினார். 320 சேவை வழங்குனர்களிடம் இருந்து பெறும் தற்போதைய 100 பில்லியன் ரூபாய் ($1.3 பில்லியன்) வருமானத்தில் இருந்து அதன் வருடாந்திர ஆதாயத்தை அதிகரிப்பது உள்ளடங்களாக, இந்தியாவில் நிறுவனத்தின் ஈடுபாட்டை 'கணிசமாக அதிகரிக்கும்' திட்டங்களை நெல்சன் வெளிப்படுத்தினார். அதே நேரம், போயிங் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய விமான நிறுவனங்களுக்கு மாதத்திற்கு இரண்டு விமானங்களை வழங்க எதிர்பார்க்கிறது.

அகமதாபாத் விமான விபத்துக்கான உத்தியோகப்பூர்வ காரணம் எதுவாக இருந்தாலும், மோடி அரசாங்கமும் போயிங் நிறுவனமும் பயணிகளின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதை விட பெருநிறுவன நலன்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன. சமூகத்தின் பரந்த சோசலிச மாற்றத்தின் ஒரு பகுதியாக, தனியார் இலாபங்களுக்கு அன்றி, மனித உயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமானத் துறையை முழுமையாக மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சமீபத்திய விபத்து மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Loading