உலகளாவிய கையிருப்பு நாணயமாக பங்களிக்கும் டாலர் சவால்களை எதிர்கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை (18 ஏப்ரல் 2025 அன்று வெளியிடப்பட்டது) இங்கே காணலாம். 

முதலில், இது ஒப்புமையில் தனிமைப்படுத்தப்பட்ட நிதியச் செய்தி ஊடகத்தின் பிரிவுகளில் ஒரு அமைதியான முணுமுணுப்பாக மட்டுமே இருந்தது. இன்று, எப்படியிருப்பினும், அதன் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன: ஜனாதிபதி ட்ரம்பால் தொடங்கப்பட்ட உலகிற்கு எதிரான அமெரிக்க பொருளாதாரப் போரின் தாக்கத்தின் கீழ், போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் அனைத்து ஏற்பாடுகள் மற்றும் வழிமுறைகளின் முறிவுக்கு மத்தியில், உலகின் உலகளாவிய நாணயமாக இருந்துகொண்டிருக்கும் அமெரிக்க டாலர் அதன் பங்கை இழக்கக்கூடும்.

ஏப்ரல் 5, 2025 சனிக்கிழமை, ஈரானின் தெஹ்ரான் நகரத்தில், தெஹ்ரானின் வெளிநாட்டு நாணய பரிமாற்றத்திற்கான இடமான ஃபெர்டோவ்சி சதுக்கத்தில் அமெரிக்க டாலர்களை எண்ணும்போது ஒரு தெரு பண பரிமாற்றக்காரர் தனது முகத்தைக் காட்டாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார். [AP Photo/Vahid Salemi]

சமீபத்தில் , பைனான்சியல் டைம்ஸ்  (Financial Times) “சர்வவல்லமையுள்ள அமெரிக்க டாலர் மீதான நம்பிக்கையை உலகம் இழந்து வருகிறதா?” என்ற தலைப்பின் கீழ் ஒரு பிரதான கட்டுரையை வெளியிட்டது. பதிலும் அதில்தான் இருக்கிறது.

நிதி சந்தைகளில் ஏற்பட்ட ஒரு அசாதாரணமான வளர்ச்சி இந்தக் கவலையை உருவாக்கியுள்ளது. “வழமையான” நிலைமைகளில், முதலீட்டாளர்கள் ஒரு பாதுகாப்பான புகலிடத்தைத் தேடுவதாலும், அமெரிக்க கருவூல பத்திரங்களைப் பெறுவதற்கு நோக்கித் திரும்புவதாலும் நிதி கொந்தளிப்பு டாலரின் உயர்வுக்கு வழிவகுக்கிறது.

ஆனால் ட்ரம்ப் தனது “பரஸ்பர வரிவிதிப்புகளை” (reciprocal tariffs) வெளியிட்ட “விடுதலை தினத்திலிருந்து” முதலீட்டாளர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் பொதுக் கடனைத் தவிர்த்துள்ளனர், மற்றும் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. கடன் மற்றும் அடமானம் ஆகியவற்றுக்கு பதிலாக, உண்மையான மதிப்பு சேமிப்பாக உள்ள தங்கத்தின் விலை, தொடர்ந்து சாதனை உயரங்களை எட்டிக்கொண்டிருக்கிறது.

பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதிக்கும் வகையில், பரந்தளவிலான நாடுகளுக்கு 30 இல் இருந்து 50 சதவீதம் வரையிலான பரஸ்பர வரிவிதிப்புகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்த போது இந்த திருப்பம் குறைந்தது. ஆனால் இடைநிறுத்தம் முடிந்த பிறகு என்ன நடக்கும்? என்ற கேள்வி இருக்கவே செய்கிறது.

உடனடி பதில் எதுவாக இருந்தாலும், ஒரு விடயம் நிச்சயம்: யாரும் “சிக்கலிலிருந்து தப்பிக்க முடியாது” என்று ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், தற்போதுள்ள நிலைக்கு திரும்ப முடியாது. ஏப்ரல் 16 அன்று, ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே வாஷிங்டனில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஜப்பானிய வர்த்தக பிரதிநிதி வெறுங்கையுடன் வீடு திரும்பினார்.

இந்த புதிய சூழ்நிலையின் தாக்கங்கள், “நிலையற்ற அமெரிக்கா” என்று தலைப்பிட்ட பைனான்சியல் டைம்ஸ் இன் ஒரு முன்னணி கட்டுரையாளர் ராணா ஃபோரூஹர் எழுதிய ஒரு கருத்துரையில் எடுத்துக்காட்டப்பட்டன.

வரிவிதிப்பு குழப்பம் மற்றும் அதன் வீழ்ச்சியில் இருந்து அவர் கற்றுக்கொண்டது என்னவென்றால், ட்ரம்பின் கீழ் அமெரிக்கா ஒரு “வளர்ந்து வரும் சந்தையாக” மாறியுள்ளது என்று கூறி ஃபோரூஹர் தொடங்கினார்.

அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தின் முந்தைய காலங்களில், டாலரின் “பாதுகாப்பான அந்தஸ்து” காரணமாக அமெரிக்க பங்குகள் மற்றும் நாணய மதிப்பு உயர்ந்துள்ளன.

“அமெரிக்க நிறுவனங்களை பலப்படுத்திய குறைந்த வட்டி விகிதங்கள், நிதி பொறிமுறை, மற்றும் உலகமயமாதல் ஆகியவை இனிமேல் பயன்படாது போனது முக்கியமாக போகவில்லை. அமெரிக்க சொத்துச் சந்தைகள், அமெரிக்க டாலரின் முடிவிற்கான கோரத்தன்மை எனப்படும் நிலைமைக்கு எதிராக பாதுகாக்கப்பட்டவை போல தோன்றின. இது பொருளாதாரச் சந்தைகளை மற்றும் டாலர் மதிப்பை வீழ்த்தும் என்ற நினைப்பு ஏற்பட்ட போதிலும், அமெரிக்க சந்தைகள் பெரிதாக பாதிக்கப்படவில்லை. ட்ரம்ப் இறுதியாக அமெரிக்காவின் அளவுக்கு மீறிய சலுகையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.”

முன்னதாக அமெரிக்கா வளர்ந்து வரும் சந்தை-வடிவ கடன் நெருக்கடியின் மையமாக மாறக்கூடும் என்ற சாத்தியத்தை நிராகரித்திருப்பேன்,ஆனால் “இனிமேல் அப்படியில்லை” என்று கூறி அவர் முடித்தார்.

பொருளாதாரத்தை மந்தமாக்கும் வரி உயர்வுகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட வரிக் குறைப்புக்கள் போன்ற ட்ரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு தற்போது $36 டிரில்லியன் ஆக உயர்ந்து வரும் “நிலைக்க முடியாத” கடன் பாரத்தை மேலும் டிரில்லியன் கணக்கில் அதிகரிக்க செய்யும்.

ஏப்ரல் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், டாய்ச்சே வங்கியின் (Deutsche Bank) நாணய பரிவர்த்தனை ஆராய்ச்சித் துறை உலகத் தலைவர் ஜோர்ஜ் சரவேலோஸ், முன்னணி உலக நிதி வட்டாரங்களில் வளர்ந்து வரும் பார்வையை தொகுத்து தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி கொள்கைகள் மாற்றப்பட்டாலும், அமெரிக்க டாலருக்கு ஏற்பட்ட பாதிப்பு நீங்கி விடவில்லை,” என்று அவர் ஒரு அறிக்கையில் எழுதினார். “சந்தை, அமெரிக்க டாலரை உலகின் கையிருப்பு நாணயம் என பார்ப்பதற்கான உருவமைப்பு சிறப்பியல்புகளை மறுபரிசீலனை செய்கிறது மற்றும் அமெரிக்க டாலரிலிருந்து விலகும் நடைமுறை (De-dollarization) நடைபெற்று வருகிறது.”

இருப்பினும், இந்த நெருக்கடிக்கு வெறுமனே ட்ரம்பின் நடவடிக்கைகளே காரணம் அல்ல. அமெரிக்காவின் பொருளாதார நிலையில் தொடர்ந்து ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக இது நீண்டகாலமாக உருவாகி வருகிறது.

ட்ரம்ப், இப்போது வெளிப்படையாக ஒப்புக் கொண்டதைப் போல, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமைக்கப்பட்ட பொருளாதார, வர்த்தக மற்றும் நிதியியல் செயல்முறைகள் அமெரிக்காவை பலவீனப்படுத்துவதில் தீர்க்கமான பங்களிப்பை அளித்துள்ளன என்பதைக் கருத்தில் கொண்டு, அவற்றை கடுமையாக சேதப்படுத்தியுள்ளார்.

நிச்சயமாக, ஹென்றி ஃபோர்ட் போலவே, “வரலாறு என்பது வீணானது” என்று கருதும் ட்ரம்ப், அவை ஏன் நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதையும், அவற்றை நிறுவுவதில் அமெரிக்கா ஏன் முன்னணி பங்கை வகித்தது என்பதையும் ஒருபோதும் விளக்கவில்லை. அவர் தனது வெறிகளில் அடிக்கடி பயன்படுத்தும் “தேசிய பாதுகாப்பு” குறித்த கவலைகளின் காரணமாக என்ற சொற்றொடரை மேற்கோள் காட்டுவது மிகவும் அதிகமாக இருக்கிறது.

போருக்குப் பிறகான நடவடிக்கைகளின் நோக்கம், போர்களுக்கு இடையிலான காலகட்டத்தில் நிலவியிருந்த சூழ்நிலைகள் மீண்டும் உருவாகாமல் தடுப்பதேயாகும். இதற்கான முக்கியமான காரணம், அந்த சூழ்நிலைகள் மீண்டும் வந்தால், அமெரிக்கா உட்பட முக்கிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்ற புரிதலே ஆகும். 1930களின் கடைசி ஆண்டுகளில் அமெரிக்காவில் பெரும் வர்க்கப் போராட்டங்கள் வெடித்திருந்தன என்பதும் இதற்குக் காரணமாகும்.

போருக்குப் பிந்தைய பொருளாதார ஒழுங்கமைப்பு மூன்று முக்கிய ஆதாரங்களின் மீது அமைந்திருந்தது—அமெரிக்க டாலரை, தங்க ஆதாரத்துடன் கொண்ட சர்வதேச நாணயமாக நிறுவுவது, வரிவிகிதங்களை குறைப்பது மற்றும் 1930-களில் ஏற்பட்ட பேரழிவுகளை தவிர்ப்பதற்காக சுதந்திர வர்த்தகத்தை ஊக்குவிப்பது, மற்றும் மார்ஷல் திட்டத்தின் மூலம் போரால் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவை மறுசீரமைப்பது. இவை மூன்றும் அமெரிக்காவின் பொருளாதார வலிமை மற்றும் தொழில்துறை சக்தியை அடிப்படையாக கொண்டிருந்தன.

போருக்குப் பிந்தைய பொருளாதார முதலாளித்துவ செழிப்பானது, அதைத் தொடர்ந்து வந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்றுரீதியில் ஏற்படும் தவிர்க்கவியலாத பொருளாதார முறிவு குறித்த மார்க்சிச பகுப்பாய்வை நிராகரித்தது என்ற பல்வேறு முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் மற்றும் ஒரு சில சுயபாணி மார்க்சிஸ்டுகளின் கூற்றுக்களுக்கு முரண்பட்ட விதத்தில், போருக்குப் பிந்தைய கட்டமைப்பானது அதன் அடிப்படை முரண்பாடுகளை —குறிப்பாக , உலகச் சந்தைக்கும் போட்டி தேசிய-அரசுகள் மற்றும் வல்லரசுகளாக அதன் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாடுகளை— கடக்க முடியவில்லை.

25 ஆண்டுகளுக்குள்—வரலாற்றின் பார்வையில் இது ஒரு குறுகிய காலம்—இந்த முரண்பாடுகள் வெளிப்பட்டன. 1971 ஆகஸ்ட் 15-ஆம் தேதி, அமெரிக்காவில் வளர்ந்து வரும் வர்த்தகச் சமநிலை மற்றும் கட்டணச் சமநிலை பற்றாக்குறையை எதிர்கொண்ட ஜனாதிபதி நிக்சன், அமெரிக்க டாலருக்கு தங்க ஆதரவை நீக்கினார்—1944ஆம் ஆண்டு பிரெட்டன் வூட்ஸ்( Bretton Woods உடன்படிக்கையை) ஒருதலைப்பட்சமாக ரத்து செய்தார்.

போருக்குப் பிந்தைய ஒழுங்கின் அடித்தளமான அமெரிக்க முதலாளித்துவத்தின் சக்தி கணிசமாக பலவீனமடையத் தொடங்கியதற்கான அறிகுறியாக அது இருந்தது

பிரெட்டன் வூட்ஸ் அமைப்புமுறை அகற்றப்பட்டதன் மூலம் ஒரு புதிய உலகளாவிய நிதியியல் அமைப்புமுறைக்கு வழிவகுத்தது. 1950கள் மற்றும் 1960களில், நாணயங்கள் நிலையான விகிதங்களில் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அந்த நிலையான விகிதங்களைப் பராமரிப்பதற்கும் நாணயப் போர்களைத் தடுப்பதற்கும் நிதி மற்றும் முதலீட்டு ஓட்டங்களிலளில் கடுமையான கட்டுப்பாடு தேவைப்பட்டது.

ஆனால் டாலர்-தங்க இணைப்பு முடிவுக்கு வந்தவுடன், நாணயங்கள் சுதந்திரமாக மிதக்கத் தொடங்கின, இதன் பொருள் மூலதனம் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் பெருகிய முறையில் அகற்றப்பட வேண்டியிருந்தது. கடன் உருவாக்கம் மற்றும் உலகெங்கிலும் தடையற்ற பணப் புழக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கு உருவாக்கப்பட்டிருந்தது.

சர்வதேச நிதி முறையின் அடிப்படையாக அமெரிக்க டாலர் தொடர்ந்து செயல்பட்டது, ஆனால் அது ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டது. இப்போது அது ஒரு “ஃபியட்” நாணயமாக (அதாவது, தங்கம் போன்ற உண்மையான மதிப்பால் அல்லாமல், அமெரிக்க அரசின் விதிமுறைகளால் மட்டுமே ஆதரிக்கப்படும் நாணயமாக) மாறியது. ஒரு புதிய உலகளாவிய நாணய ஒழுங்குமுறை உருவாக்கப்பட்டது.

பைனான்சியல் டைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டது போல், 1971-ல் நிக்சன் அமெரிக்க டாலரின் தங்க இணைப்பை துண்டித்த பிறகும், ‘கிரீன்பேக்’ என அழைக்கப்படும் அமெரிக்க டாலர் சர்வதேச பணவியல் அமைப்பின் மையமாகவே தொடர்ந்து நீடித்து வந்தது. உண்மையில், விரிவடையும் மற்றும் பெருகிய முறையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள உலகளாவிய நிதி அமைப்பில் டாலரின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது. டாலரின் முக்கியத்துவத்தை குறைப்பதற்குப் பதிலாக, நிக்சனின் நடவடிக்கை பல வகைகளில் அதை மேலும் உறுதிப்படுத்தியது.

தங்கத்துடன் அமெரிக்க டாலர் இணைக்கப்பட்டிருந்ததால் ஏற்பட்ட கட்டுப்பாடுகளிலிருந்து அதை விடுவித்ததும், நிலையான மாற்று விகித அமைப்பைப் பராமரிக்க அரசாங்கம் விதித்திருந்த ஒத்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதும், முந்தைய ஆட்சி விதித்திருந்த கட்டுப்பாடுகளிலிருந்து நிதியை விடுவித்தன. இதனால், புதிய  இலாப குவிப்புக்கான வழிகள் பெரிதும் திறக்கப்பட்டன.

அமெரிக்க பொருளாதாரத்தில் முதன்மையாக, இது நிதியமயமாக்கல் என அழைக்கப்படுவதற்கு அதிகமாக வழிவகுத்தது. அதாவது ஊக மற்றும் ஒட்டுண்ணித்தனமான முறைகள் மூலமாக இலாப குவிப்புக்கு வழிவகுத்தது.

நிதி முறைகள் வளர்ந்ததுடன், 1930களின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக நிதி மூலதனத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டன. இதன் உச்சமாக, 1999ஆம் ஆண்டு கிளிண்டன் நிர்வாகம், பெரிய பொருளாதார மந்த காலத்தில் உருவான ‘கிளாஸ்-ஸ்டீகல் சட்டம்’ (Glass-Steagall Act) என்ற இறுதி முக்கியமான சட்டத்தை ரத்து செய்தது.

1991ஆம் ஆண்டு, ஸ்ராலினிச அதிகாரத்துவகம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததுடன், சீனாவில் முதலாளித்துவ மீட்சி கொண்டு வரப்பட்டதும், முன்னாள் காலனித்து நாடுகளில் முதலாளித்துவ தேசிய ஆட்சிகள் வளர்ச்சிக் கொள்கைகளைக் கைவிட்டதும், உற்பத்தியின் பூகோளமயமாக்கல் மூலமாகப் புதிய இலாப வாய்ப்புகளைத் திறந்துவிட்டன.

இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த ஆர்வமாக இருந்த அமெரிக்கா, சீனாவை புதிய உலக ஒழுங்கில் சேர அழைப்பு விடுத்தது. கிளிண்டன் நிர்வாகம், உலக வர்த்தக அமைப்பில் சீனாவின் உறுப்புரிமைக்கு ஊக்கமளித்தது. அதன் பின்னர் பின்னர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் காலத்தில் அமெரிக்கா அதற்கு ஒப்புதல் அளித்தது.

சீனாவின் மலிவான உழைப்பை ஒரு பெரிய லாப வாய்ப்பாகக் பார்த்த அமெரிக்கா, புதிய உலக ஒழுங்கில், சீனா தனக்குக் கீழ்ப்படிந்தே இருக்கும் என்று நம்பியது. ஆனால் முதலாளித்துவ பொருளாதாரம் அதன் சொந்த சமரசப்படுத்த முடியாத தர்க்கத்தை கொண்டுள்ளது. ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அது அவர்களின் முதுகுக்குப் பின்னால் இயங்குகிறது. அதன் விளைவுகளை அவர்களால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.

சீனாவின் முதலாளித்துவ தன்னலக்குழு, விவசாயிகள் நாடாக இருந்த சீனா இப்போது நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்துடன் ஒரு தொழில்சார் நாடாக மாறியுள்ளதை எதிர்கொண்டது. இந்த வளர்ச்சியை தொடர்ந்து, அவர்கள் மதிப்புச் சங்கிலியில் [உயர்ந்த தரமான தொழில்கள், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை] மேலே நகர வேண்டியிருப்பதை உணர்ந்தனர்.

சீனா வெறுமனே மலிவான நுகர்வுப் பொருட்களை மட்டும் வழங்கும் நாடாக இருக்க முடியாது, மாறாக பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்கவும் மற்றும் “சமூக ஸ்திரப்பாடு” என்று அது அழைக்கும் ஒன்றைப் பராமரிக்கவும் வேண்டுமானால், அதன் உற்பத்தியை மேம்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மிகவும் உயர்ந்த தரமான பொருட்களின் தயாரிப்புகளுக்கு விரிவுபடுத்த வேண்டியிருந்தது.

எனினும், இந்த அபிவிருத்தி அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு ஒரு இருப்பியல் சவாலாக உள்ளது. இதை 2011-ல் ஆசியாவுக்கான திருப்பத்தை (Pivot to Asia) அறிவித்த போது ஒபாமா நிர்வாகம் உணர்ந்தது. அவரது வர்த்தக பிரதிநிதி மைக்கேல் ஃப்ரோமன் 2014-ல் Foreign Affairs இதழில் எழுதிய கட்டுரையில், அமெரிக்காவின் பலவீனமான நிலையை அங்கீகரித்துடன், மேலும், அமெரிக்கா முன்னணி பங்கை வகிக்க, உலக வர்த்தக அமைப்பு “புத்துயிர் பெற வேண்டும்” என்று ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், வர்த்தகம் மற்றும் கொடுப்பனவுகளின் சமநிலை (the balance of trade and payments) தொடர்ந்து விரிவடைந்ததால், இத்தகைய முயற்சிகள் பயனற்றுப் போயின. அமெரிக்க அரசாங்கக் கடன், “நிலைத்திருக்க முடியாத” என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலகின் கையிருப்பு நாணயமாக டாலரின் பங்கினால்தான் அமெரிக்கா அதன் கடனைத் தொடர முடிந்தது. உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களும், அதேபோல் ஏனைய அரசாங்கங்களும், கடன் சந்தைக்குள் பணத்தை பாய்ச்சிக்கொண்டிருந்த வரை, அமெரிக்க ஏகாதிபத்திய அரசு, அதன் பரந்த இராணுவச் செலவுடன், தொடர்ந்து செயல்பட முடிந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், CNN மற்றும் செய்தி வர்ணனையாளர் ஃபரீத் ஜகாரியா இந்த உறவை விவரித்துள்ளார்.

“அமெரிக்காவின் அரசியல்வாதிகள் பற்றாக்குறை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் செலவு செய்வதற்குப் பழக்கமாகிவிட்டனர் - பொதுக் கடன் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது, 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 6.5 டிரில்லியன் டாலரில் இருந்து இன்று 31.5 டிரில்லியன் டாலராக உள்ளது. அமெரிக்க மத்திய வங்கி (ஃபெடரல் ரிசர்வ் - Fed) அதன் இருப்புநிலைக் குறிப்பை 20 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 730 பில்லியன் டாலராக இருந்ததில் இருந்து இன்று சுமார் 8.7 ட்ரில்லியன் டாலராக பாரியளவில் பன்னிரண்டு மடங்கு அதிகரித்ததன் மூலமாக தொடர்ச்சியான நிதியியல் நெருக்கடிகளைத் தீர்த்துள்ளது. இவை அனைத்தும் டாலரின் தனித்துவமான நிலையால் மட்டுமே சாத்தியமாகிறது. அந்த நிலை வலுவிழந்தால், அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிர்கொள்ள நேரிடும்.”

இந்த நெருக்கடியை எதிர்கொண்டு, சில வட்டாரங்களில் இந்தக் கருத்து முன்வைக்கப்படுகிறது: டாலரின் இடர்பாடுகள் எப்படி இருந்தாலும், அது தொடர்ந்து உலக நாணயமாக செயல்படும்.

டாலர் நெருக்கடி பற்றிய பைனான்சியல் டைம்ஸ் கட்டுரை ஒரு முன்னாள் கருவூல அதிகாரியும் இப்பொழுது ஒரு நிதியச் சிந்தனைக் குழுவான OMFIF இன் அமெரிக்கத் தலைவருமான மார்க் சோபலின் கருத்துக்களை மேற்கோளிட்டுள்ளது.

“டாலரின் மேலாதிக்கம் எதிர்காலத்திலும் தொடர்ந்து நிலைத்திருக்கும், ஏனெனில் அதற்கு சாத்தியமான மாற்றீடுகள் எதுவும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார். “ஐரோப்பா அதன் செயலை ஒன்றிணைக்க முடியுமா என்று நான் சந்தேகிக்கிறேன், சீனா அதன் மூலதனக் கணக்கை விரைவில் திறக்கப் போவதில்லை.எனவே, மாற்று வழி என்ன? ஒன்றுமே இல்லை.”

ஐரோப்பாவும் சீனாவும் டாலருக்கு மாற்றாக செயல் பட முடியாது என்ற சோபெலின் கூற்றுகள் ஐயத்திற்கு இடமின்றி உண்மையாக உள்ளன.

ஆனால் அவரது பகுப்பாய்வு முழுமையற்றதாக இருக்கிறது, ஏனென்றால் அது வரலாற்று அனுபவத்தின் படிப்பினைகளைப் புறக்கணிக்கும் ஒரு தவறான தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.உலக வணிகத்திற்கும் நிதியத்திற்கும் ஒரு சர்வதேச நாணயம் தேவை என்பதால், டாலர் இப்பங்கைத் தொடர வேண்டும், ஏனெனில் அதற்கு பதிலாக எதுவும் முடியாது என்ற அனுமானத்தின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையின் தர்க்கம் என்னவென்றால் டாலரின் பங்கு தொடர்ந்து நீடிக்க முடியும் என்றோ அல்லது வேறொரு தேசிய நாணயம் அதற்கு மாற்றாக வரும் என்றோ இருக்கவில்லை. மாறாக, உலகப் பொருளாதாரமானது, இரண்டு உலகப் போருக்கிடையில் நடந்தது போல, அது விளைவித்த அத்தனை பேரழிவுகரமான விளைவுகளுடனும், அதிகரித்தளவில் எதிர்விரோத வர்த்தக, நிதியியல் மற்றும் நாணய அணிகளாக —ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு எதிராக மோதும் நிலை— சிதறும்.

அவற்றின் அனைத்து பகுத்தறிவற்ற செயல்களுக்கும், தெளிவான முட்டாள் தனத்திற்கும் அப்பால், ட்ரம்பின் கொள்கைகளில் ஒரு தர்க்கம் இருக்கிறது. அவர் வெளியிடும் ஒவ்வொரு அறிக்கையும், நிர்வாக உத்தரவும், தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு நியாயப்படுத்தப்படுகின்றன : அதாவது தற்போதைய பொருளாதார ஒழுங்கு அமெரிக்காவின் போர் செய்யும் இராணுவத் திறனைத் பலவீனப்படுத்தியுள்ளது, அது என்ன விலை கொடுத்தாவது சரிசெய்யப்பட வேண்டும்.

ஆகவே டாலரின் நெருக்கடியானது, ஒரு புதிய உலகப் போருக்கான நிலைமைகள் துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகின்றன என்பதைக் குறிக்கிறது. இதில் அமெரிக்காவைப் பொறுத்த வரையில், அதன் மேலாதிக்கத்திற்கான இருத்தலியல் மீதான அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவே முக்கிய இலக்காக இருக்கின்றது.

சுங்கவரிகள் 145 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் உயர்வுகள் மற்றும் சீனாவிற்கான உயர்-தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றுடன், அமெரிக்கா பெய்ஜிங் மீது நடைமுறையளவில் ஒரு பொருளாதார முற்றுகையை திணித்துள்ளது. இது ஒரு நேரடி இராணுவ மோதலுக்கு இட்டுச் செல்வதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்? அது விரைவில் நிகழலாம் என்பதைக் வரலாறு குறிப்பிடுகிறது.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், ஆளும் வர்க்கங்களிடம், அவை ஆளும் முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடிக்கு எந்த தீர்வும் இல்லை. எல்லா இடங்களிலும், இந்த பொறிவுக்கான அவர்களின் பதிலளிப்பு பொருளாதார போர்முறை, இராணுவ செலவினங்களை அதிகரித்தல், மற்றும் பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சிகளைத் திணிப்பதன் மூலமாக ஜனநாயக உரிமைகளை அழித்தல் ஆகியவையாகும்.

டாலர் நெருக்கடியில் மிகத் தீவிரமாக எடுத்துக்காட்டப்பட்ட முதலாளித்துவ அமைப்புமுறையின் வரலாற்று நெருக்கடியை ஒரு முற்போக்கான முறையில் தீர்க்கும் திறனைக் கொண்டுள்ள ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். ஆனால் அந்த அதிகாரம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு, தொழிலாள வர்க்கம் சோசலிசப் புரட்சியின் முன்னோக்கை எடுத்துக்கொண்டு போராட வேண்டும்.

Loading