மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்ற ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தல், பாசிச அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது வர்த்தகப் போர், இராணுவவாதம், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் தன்னலக்குழுக்களின் பகிரங்கமான ஆட்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய நிகழ்ச்சி நிரலுக்கு உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள பாரிய எதிர்ப்பின் மற்றொரு அறிகுறியாகும்.
இந்தத் தேர்தலானது, ஆட்சியில் இருந்த தொழிற் கட்சிக்கு வெற்றியை அளித்ததுடன், எதிர்க்கட்சியான தாராளவாத-தேசியக் கூட்டணியை கிட்டத்தட்ட ஒரு அடிமட்டத்திற்குத் துடைத்தெறிந்தது.
வாக்கு எண்ணிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் 150 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் தொழிற்கட்சி 86 க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க உள்ளது. அதே நேரத்தில் தாராளவாத-தேசியக் கூட்டணி 45 க்கும் குறைவான இடங்களையே பெறக்கூடும். கூட்டணித் தலைவர் பீட்டர் டட்டன் உட்பட 14 தாராளவாத-தேசியக் கூட்டணி எம்.பி.க்கள் தங்கள் இடத்தை இழந்தனர்.
பசுமைக் கட்சியினரின் ஆதரவுடன், தொழிற்கட்சி அநேகமாக பாராளுமன்றத்தின் மேல் சபையான செனட்டையும் கட்டுப்படுத்தக்கூடும்.
இந்தத் தேர்தல் முடிவுகள், பெரும்பாலான ஊடக விமர்சகர்களின் கணிப்புகளையும், தொங்கு நாடாளுமன்றம் மற்றும் சிறுபான்மை தொழிற்கட்சி அல்லது கூட்டணி அரசாங்கம் அமையும் என்று கணித்த கருத்துக் கணிப்புகளையும் மீறுவதாக இருந்தது.
இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகள், கனேடிய தேர்தலைப் போலவே நடந்தது. அங்கு ட்ரம்புடன் அடையாளம் காணப்பட்ட பழமைவாதக் கட்சி மீதான எதிர்ப்புக் காரணமாக, மோசமான வாக்குப்பதிவு இருந்தபோதிலும் தாராளவாதக் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது,
இதேபோல், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட அடிப்படை மாற்றமானது, ட்ரம்ப் மீதான அதிகரித்து வரும் மக்களின் பதட்டத்தையும் விரோதத்தையும் எடுத்துக்காட்டுகிறது. கடந்த நவம்பரில் ட்ரம்ப் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றபோது, மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் அவர் மீது அச்சம் கொண்டிருந்ததாக கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டின.
ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரத்தின் நடுப்பகுதியில், அந்த எண்ணிக்கை 70 சதவீதத்தை நெருங்கியது. ட்ரம்ப் கட்டவிழ்த்து விட்ட உலகளாவிய வர்த்தகப் போர் பொருளாதார நெருக்கடியை விளைவிக்கும் என்ற அச்சத்தையும், அத்துடன் அவரது இராணுவவாதக் கொள்கைகள் புவிசார் அரசியல் மோதல் மற்றும் போரின் அச்சுறுத்தலை உயர்த்துவதாகவும் கருத்து தெரிவித்தவர்கள் கவலை தெரிவித்தனர்.
தொழிற் கட்சியும் பிரதான ஊடகங்களும் ஏற்கனவே இந்த தேர்தல் முடிவுகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான ஒரு சிறந்த பிரச்சாரத்தின் விளைவாக ஏற்பட்டதாக சித்தரிக்க முயன்று வருகின்றன.
உண்மையில், ஒரு “சிறிய அளவிலான” பிரச்சாரத்தை மேற்கொண்ட தொழிற்கட்சி, கிட்டத்தட்ட எந்த புதிய கொள்கைகளையும் முன்மொழியவில்லை. பல தசாப்தங்களாக காணப்படாத அளவிலான வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் பின்னணியில், வாரத்திற்கு 5 டாலர் வரி குறைப்பே அது வெளியிட்ட பரிதாபகரமான அறிவிப்பாகும்.
தாராளவாத-தேசியக் கூட்டணியுடன் இணைந்து, உலகளவில் ஏற்பட்டுவரும் எழுச்சிகளை அதிகாரப்பூர்வ தேர்தல் பிரச்சாரத்திலிருந்து விலக்கி வைக்க தொழிற்கட்சி முயன்றது. மேலும், ஆஸ்திரேலியா அவற்றின் விளைவுகளைச் சமாளிக்க “தனித்துவமான” இடத்தில் உள்ளது என்று தொழிற்கட்சி அபத்தமாகக் கூறியது.
ஆனால், பாரிய ட்ரம்ப்-விரோத மனோநிலையை சுரண்டிக்கொண்ட தொழிற் கட்சி, தாராளவாத-தேசியக் கூட்டணியின் டட்டனை ஒரு “ஆக்ரோஷமான” மற்றும் “நம்பகத்தன்மையற்ற” நபராகவும், ஏற்கனவே நெருக்கடி நிறைந்த பொது சுகாதார அமைப்புமுறையில் வெட்டுக்களைக் கொண்டு “அமெரிக்கமயமாக்க” முனைவார் என்றும், வெளியுறவுக் கொள்கையில் ஒழுங்கற்றவராக இருப்பார் என்றும் சித்தரித்தது, ட்ரம்பின் செயல்கள் அல்லது வார்த்தைகள் குறித்து தான் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று அல்பானீஸ் பகிரங்கமாக அறிவித்த போதிலும் இது நிகழ்ந்துள்ளது.
படுமோசமாக இருந்த கூட்டணிக் கட்சிகளின் பிரச்சாரத்தில் ட்ரம்ப் பெரிய அளவில் முன்னிலை வகித்தார். சில விமர்சகர்கள் தேர்தல் போட்டியில் அல்பானீஸ், டட்டன் மற்றும் ட்ரம்ப் ஆகிய மூன்று வேட்பாளர்கள் இருப்பதாகவும், பிந்தையவர் “நிழல்” கூட்டணிக்கு சேதம் விளைவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.
தேர்தலுக்கு முன்பு, ட்ரம்பை “ஒரு சிறந்த சிந்தனையாளர் மற்றும் பேரம் பேசுபவர்” என்று டட்டன் பாராட்டியிருந்தார். இருவருக்குள்ளும் பொதுவான கருத்தியல் உறவுகள் இருப்பதால், அவருடன் இணைந்து பணியாற்றுவது சிறந்ததாக இருக்கும் என்று டட்டன் கூறியிருந்தார்.
ஆனால், ட்ரம்ப்பிசத்தின் வாசனையை வீசிய கூட்டணிக் கட்சிகளின் கொள்கைகள் பரவலாக மக்களிடையே செல்வாக்கிழந்திருந்தன. மேலும் அவை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ கைவிடப்பட்டன. ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறையை மாதிரியாகக் கொண்டு, 40,000 க்கும் அதிகமான கூட்டாட்சி அரசு வேலைகளைக் வெட்டிக் குறைப்பதற்கான வாக்குறுதியை கூட்டணி திரும்பப் பெற்றது. வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர பொது ஊழியர்களை கட்டாயப்படுத்துவதற்கான அச்சுறுத்தல்களை இது முடிவுக்கு கொண்டு வந்தது.
குற்றவியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களின் குடியுரிமையை ரத்து செய்வது குறித்து ட்ரம்ப் பாணியிலான வாக்கெடுப்பை நடத்த கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டிருந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான தாக்குதலுடன் தொடர்புடையதாகவும், உள்நாட்டு அணு ஆயுத உற்பத்தியின் சாத்தியக்கூறுகளை எழுப்பியதாகவும் கூறப்படும் ஆஸ்திரேலியாவின் அணுசக்தித் துறையை விரிவுபடுத்தும் தனது திட்டத்தைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்க டட்டன் முயன்றதாகவும் ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டன.
இந்த பின்னடைவுகள் தராளவாத கூட்டணியின் பிரச்சாரத்தை சீரற்றதாக மாற்றியது. டட்டன் ட்ரம்பிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ள முயன்றபோதும், கட்சியின் முன்னணி நபரான தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. ஜெசிந்தா பிரைஸ், டட்டனுடன் சேர்ந்து ஒரு பிரச்சாரக் கூட்டத்தில், “ஆஸ்திரேலியாவை மீண்டும் சிறந்ததாக்குவோம்” என்று அறிவித்தார்
2022 கூட்டாட்சித் தேர்தலில், தாராளவாத தேசியக் கூட்டணியின் தோல்வியால் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்ட, அதன் இருத்தலியல் நெருக்கடியுடன், ட்ரம்ப் மீதான மக்கள் விரோதப் போக்கு மேலும் மேலும் ஆழமடைந்துள்ளது.
2025 தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் பெற்ற வாக்குகள் மிகக் குறைவாக அதன் வரலாற்று இழப்பாக இருந்தது. முதன்மை வாக்குகளில் சுமார் 32 சதவீதத்துடன், இது 1940களில் இருந்து நீடித்துவரும் கூட்டணியின் வரலாற்றில் மிக மோசமான முடிவாகும்.
கூட்டணியின் நகர்ப்புற அணியான தாராளவாதிகளுக்கும், ஆளும் உயரடுக்கின் பாரம்பரிய பழமைவாதக் கட்சிக்கும் இப்போது தலைநகரங்களில் எந்தப் பிரசன்னமும் இல்லை. நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் அவர்கள் நான்கு, ஒருவேளை ஐந்து இடங்களை மட்டுமே பெறுவார்கள். மெல்போர்னில் மூன்று இடங்கள், தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான தாஸ்மேனியா அல்லது அடிலெய்டில் எந்த இடத்தையும் அவர்கள் பெறமாட்டார்கள்.
2022 ஆம் ஆண்டுக்கு முன்பு பாரம்பரியமாக தாராளவாதிகள் ஆதிக்கம் செலுத்திய சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய இடங்களிலுள்ள “நீல-ரிப்பன்” தொகுதிகளில் டீல்ஸ் சுயேச்சைகள் (Teal independents) தங்கள் பிடியை பலப்படுத்திக் கொண்டதாகத் தெரிகிறது. சுற்றுச்சூழல் தொடர்பான மற்றும் அடையாள அரசியலுக்கு அடிபணிவதையும், வணிக சார்பு தடையற்ற சந்தைக் கொள்கைகளுக்கு தீவிர ஆதரவையும் டீல்ஸ்கள் கொண்டிருக்கின்றன.
இந்த தேர்தல் முடிவுகள், ஒரு “பரந்த தேவாலய” பழமைவாத கட்சியாக இருந்த கூட்டணியின் வீழ்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தாராளவாதிகள் துடைத்தழிக்கப்பட்டது காரணமாக, பெரும்பாலும் வலதுசாரி ஜனரஞ்சகவாதத்தை நோக்கி செல்லும் பிராந்திய தேசியவாதிகள் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள். ஒரு காலத்தில் “மிதவாத” தாராளவாதிகளாக இருந்தவர்கள் அடிப்படையில் டீல்ஸ் சுயேச்சைகள் வடிவத்தில் கூட்டணிக்கு வெளியே உள்ளனர்.
கூட்டணியில் வலதுசாரிகள் பலமடைவது அதன் வேலைத்திட்டம் பாரியளவில் நிராகரிக்கப்படும் நிலைமைகளின் கீழ் நிகழ்கிறது. கூட்டணி மட்டுமல்ல, ஒன் நேஷன் போன்ற தீவிர வலதுசாரி கட்சிகளும் தேர்தலில் மிகக் குறைந்தளவிலான ஆதாயங்களைப் பெற்றன அல்லது பின்னுக்கு தள்ளப்பட்டன.
தொழிற் கட்சியின் முதன்மை வாக்குகள் வரலாற்று வீழ்ச்சிக்கு அருகில் உள்ளது என்ற உண்மையை மூடிமறைக்க கூட்டணிக் கட்சிகளின் தோல்வி பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொழிற் கட்சியின் முதன்மை வாக்குகள் 2022 ஐ விட வெறும் 2 சதவீதம் மட்டுமே அதிகமாகும். இது, 1930 களுக்குப் பிந்தைய அதற்கு கிடைத்த மிகக் குறைந்த வாக்குளாகும். இந்த தேர்தலில், தொழிற்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டு வாக்குகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறைவாகும். கூட்டணிக் கட்சிகளின் சிதைவிலிருந்து தொழிற் கட்சி முன்னணிக்கு வந்ததே ஒழிய அதற்கு வெகுஜன ஆதரவு இருக்கவில்லை.
கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்கு கூடுதலாக, தொழிற் கட்சி உத்தியோகபூர்வ “இடதுகளிடமிருந்து” ஆதரவைப் பெற்றிருந்தது. தொழிற் கட்சியுடன் ஒரு கூட்டணி அரசாங்கத்திற்காக பிரச்சாரம் செய்த பசுமைக் கட்சியினர், “முற்போக்கான சீர்திருத்தங்களின்” ஒரு “பொற்காலத்தை” இது தொடங்கும் என்று அவர்கள் அபத்தமாக வாதிட்டனர்.
பசுமைக் கட்சியினர் தங்கள் கீழ்சபையின் நான்கு இடங்களில் குறைந்தது இரண்டை இழந்துள்ளனர். கட்சித் தலைவர் ஆடம் பாண்டின் பதவி இன்னும் ஆபத்தில் உள்ளது. தாராளவாத-தொழிலாளர் கட்சியை முன்னுரிமைப்படுத்தும் ஏற்பாடுகளை பசுமைக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், பசுமைக் கட்சியினர் ஏறத்தாழ பிரத்தியேகமாக தொழிற்கட்சி அரசாங்கத்திற்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அளவிற்கு, மக்கள் நேரடியாக தொழிற்கட்சிக்கு வாக்களிப்பதைக் காட்டிலும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முறையீடு ஏதும் இருக்கவில்லை. அவர்களுடைய வீழ்ச்சி, அவர்களுடைய வலதுசாரிப் போக்கைப் பிரதிபலித்தது. இது அவர்கள் ஒரு போர்க் கொள்கையை ஊக்குவிப்பதையும், காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு ஆதரவளித்ததற்காக தொழிற்கட்சி அரசாங்கத்தின் மீதான கிட்டத்தட்ட அனைத்து விமர்சனங்களையும் கைவிட்டதினால் ஏற்பட்டது.
போலி இடது குழுக்கள் இதைப் பின்பற்றி, குறைந்த தீமை என்ற தவறான சாக்குப்போக்கின் கீழ் தொழிற்கட்சிக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்தன. கடந்த மூன்று ஆண்டுகளில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியை மூடிமறைக்க பெருநிறுவன தொழிற்சங்க அதிகாரத்துவம், தொழிற்கட்சியை மீண்டும் தேர்ந்தெடுக்க அழைப்பு விடுத்தது.
பெருநிறுவன ஊடகங்களின் பெரும் பகுதி இந்த இயக்கத்திற்கு பின்னால் அணிதிரண்டன. ஆளும் வர்க்கத்தின் சார்பாகப் பேசுகையில், அவர்கள் தொழிற்கட்சியை அதிகளவில் ஆதரித்தனர். சிறுபான்மை அரசாங்கத்தின் உறுதியற்ற தன்மையைத் தவிர்ப்பதற்கு இதுவே சிறந்த வழி என்று கூறினர்.
வரவிருக்கும் அடுத்த அரசாங்கம் சமூக சேவைகளில் பெரும் வெட்டுக்களைச் செயல்படுத்தி பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட வேண்டும் என்றும், இராணுவ செலவினங்களில் பாரிய அதிகரிப்பு தேவை என்பது குறித்தும் நிதிய பத்திரிகைகளில் தொடர்ச்சியான விவாதம் நடைபெற்றது. தொழிலாள வர்க்கத்தின் மீதான இத்தாக்குதலை தொழிற்கட்சி தொடர வேண்டிய அவசியம் ஏற்கனவே உத்தியோகபூர்வ செய்திகளில் மேலாதிக்கம் செலுத்தும் பொருளாக உள்ளது.
தொழிற்கட்சி தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கான ஒரு குறியீட்டு வார்த்தையான “உற்பத்தித்திறன்”, நிர்வாகத்தின் மிகப்பெரிய கொள்கையாக இருக்கும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அறிவித்துள்ளார். அல்பானீஸ் வரும் வாரங்களில் ட்ரம்பை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அவர் தொழிற்கட்சியின் முதல் பதவிக்காலத்தில் மையமாக இருந்த சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலுக்கு ஆஸ்திரேலியாவின் உறுதிப்பாட்டை ஆழப்படுத்துவார்.
செய்தி ஊடகங்களில் போலி விளம்பரங்கள் இருந்தபோதிலும், இந்த அரசாங்கம் தொழிலாள வர்க்கத்துடன் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளது. டட்டன் மற்றும் அவரது கூட்டணிக் கட்சிகளை நிராகரிப்பது சமூக நிலைமைகள் மீதான பெரிய தாக்குதல்களையும், இராணுவவாதத்தை அதிகரிப்பதையும் தவிர்க்கக்கூடும் என்ற மாயைகள் மக்களின் பரந்த பிரிவுகளுக்கு இருந்ததால், அவர்கள் கூர்மையான அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இது சோசலிச சமத்துவக் கட்சி தலைமையிலான பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பசுமைவாதிகள் மற்றும் போலி இடதுசாரிகளால் பிரச்சாரம் செய்யப்பட்ட குறைந்த தீமை என்று அழைக்கப்படுவதற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி, தொழிற்கட்சி மற்றும் தாராளவாத கூட்டணிக் கட்சிகளின் போர்-சார்பு மற்றும் வணிக-சார்பு வேலைத்திட்டங்களை அம்பலப்படுத்தியது. மேலும், சோசலிச சமத்துவக் கட்சி ஆஸ்திரேலிய விதிவிலக்குவாதத்தின் பொய்களுக்கு எதிராக, இந்த நாட்டின் அபிவிருத்திகள் 1930 களுக்குப் பிந்தைய உலக முதலாளித்துவத்தின் மிக ஆழமான நிலைமுறிவால் தீர்மானிக்கப்படும் என்று அது விளக்கியது.
மேலும், திட்ட நிரலில் உள்ள பாரிய சமூகப் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவதே தீர்க்கமான பணி என்று அது வலியுறுத்தியது. இது அவசரமான பணியாகும்.